கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மாதம்பிட்டி மற்றும் கிம்புலாஎல பிரதேசங்களைச் சேர்ந்த 43, 46 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 25 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


