Monday, March 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

தமிழகத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் முயற்சி! அமித் ஷா மீண்டும் வருகை?

மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருகை தரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் பேட்டியில் தெரிவித்தார்.

ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாகக் கூறியிருந்தார்.

அந்த வகையில், ஜூலை இரண்டாம் வாரத்தில் அமித் ஷா, தமிழகத்துக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வருகையின்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மதுரையில் நடத்தப்பட்டதுபோல சென்னையிலும் பாஜக நிர்வாகிகளுடன் தனி அறையில் கருத்துகளை அமித் ஷா கேட்டறியலாம் என்றும் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸையும் அமித் ஷா சந்தித்து, கூட்டணி குறித்து பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, அமித் ஷாவின் வருகையின்போது, மேலும் சில கட்சிகள் கூட்டணி சேரலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விட்டன. இதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தலைமையில், ஜூன் 8 ஆம் தேதியில் மதுரையில் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீநிவாசன், அண்ணாமலை உள்பட பல முக்கிய நிர்வாகிகளும் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தமிழகத்தில் பாஜகவை பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கட்சியினருக்கு வலியுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு வருகை தந்து, ஆய்வு செய்யவிருப்பதாகவும் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments