லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டது. விமானம் வானில் பறக்க தொடங்கிய போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் லண்டன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
மேலும் அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை சென்னை வர வேண்டிய விமானமும், சென்னையிலிருந்து லண்டன் செல்ல வேண்டிய இரண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த 366 பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் லண்டனில் இருந்து சென்னை வர வேண்டிய 300க்கும் மேற்பட்டோரும் அவதி அடைந்துள்ளனர்.
பயணிகளுக்கு முன்னதாகவே இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததால் பெரும்பாலானோர் விமான நிலையம் வரவில்லை. சிலர் மட்டுமே வந்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி திருப்பி செல்கின்றனர்.
அகமதாபாத் விமான நிலைய விபத்திற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானங்கள் தீவிர சோதனைக்கு பிறகே இயக்கப்படுகிறது. அதை மீறியும் சிறு சிறு இயந்திர கோளாறுகள் ஏற்படும் பொழுது விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


