இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத வரியுடன் அபராதமாக விதித்த 25 சதவீத வரி இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது. இதுதொடர்பாக குஜராத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, ‘‘விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில்களின் நலன்தான் மிக முக்கியமானவை. அமெரிக்காவின் மிரட்டலால், நமக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். ஆனால், அனைத்தையும் நாம் தாங்கிக்கொள்வோம். அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற மந்திரத்தை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்தியா கடைப்பிடித்து வரும் மிகவும் விசித்திரமான வெளியுறவு கொள்கையின் விளைவுகளை இப்போது பார்த்து வருகிறோம். இதற்கு அரசு எவ்வாறு பதிலளிக்கும் என்பதை பார்ப்போம். வெறும் அலங்கார பேச்சுகள் மட்டும் போதாது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. (சரக்கு சேவை வரி) மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் சிறுகுறு தொழில் துறையை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். அப்படி இருக்கும் போது மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எவ்வாறு வாங்குவார்கள். உற்பத்தி இல்லாத இடத்தில், பொருட்களை எப்படி வாங்க சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


