யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
பருத்துத்துறை நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று காணிகளை விடுவிக்குமாறு கோரிய ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டது.
தபாலகம், நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர சபை, ஆகியவற்றிற்கு சொந்தமான காணிகளிலிருந்தும், கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீடு, மற்றும் ஏனைய காணிகளையும் விடுவிக்குமாறு கோரியும், இராணுவம் மற்றும் கடற்படை வெளியேற வேண்டும் என்று கோரியும் போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், வலிக்காமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் ”வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு”, ”மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்கு”, ”தபாலக காணியிலிருந்து வெளியேறு”, போன்ற கோசங்கள் முன்வைக்கப்பட்டன.
பருத்தித்துறை துறைமுகத்திற்கு எதிராகவுள்ள காணி, மற்றும் வெளிச்சம்வீடு என்பன இராணுவம் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது தபாலகம், நீதிமன்றம் என்பனவற்றிற்கான கட்டிடங்கள் புதிதாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காணி இன்மை காரணமாக திரும்பும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


