Tuesday, June 30, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இவ்வருடம் மாகாண சபைத்த் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - ஐக்கிய மக்கள் சக்தி

இவ்வருடம் மாகாண சபைத்த் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – ஐக்கிய மக்கள் சக்தி

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் நிலவும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வாய்ப்பில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசு தனது முடிவை எடுப்பதற்கு மேலதிகமாக மூன்று மாத கால அவகாசம் கோரியுள்ளது. இதனால் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதில் தொடர்ச்சியான தாமதங்கள் நீடித்து வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் எவையும் காணப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்திலேயே நான், மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தோம். எனினும், அரசின் தொடர்ச்சியான தாமதங்கள் காரணமாக, ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலக்கெடுவைத் தாண்டியும் இந்தச் செயன்முறை நீண்டு செல்கின்றது.

பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதே எதிர்க்கட்சியின் முதன்மை முன்மொழிவாக உள்ளது. இந்தக் கட்டமைப்புக்குள் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான கட்டாயப் பிரதிநிதித்துவத்தை அரசு  கோரியுள்ளது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சிகள் அதனைத் தனிச் சட்ட ஏற்பாடாகக் கொண்டு வராவிட்டாலும், 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இணக்கம் வெளியிட்டுள்ளன.

இருப்பினும், தெரிவுக்குழு தனது பணிகளைத் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்தும் முறையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த மந்தகதி நிலைமையானது, இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்தப்படாது என்ற எங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றது. – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments