அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த ‘புஷ்பா 2’ தெலுங்குப் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. ஐதராபாத்தில் உள்ள பிரபலமான சந்தியா தியேட்டரில் ஒரு நாள் முன்னதாக நடந்த பிரிமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் 35 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய 10 வயது மகன் படுகாயமடைந்து இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இந்த வழக்கின் காரணமாக கடந்த வாரம் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை ஆந்திர மாநில காவல்துறை நாட உள்ளதாகத் தெரிகிறது. காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர், ஆந்திர மாநில சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அந்த சிறுவனின் உடல்நிலை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இன்னும் கவலைக்கிடமான நிலையில்தான் அந்த சிறுவன் உள்ளதாகத் தெரிகிறது.
அது மட்டுமல்லாது சந்தியா தியேட்டருக்கு காவல் துறை சார்பில் ‘ஷோகாஸ் நோட்டீஸ்’ ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாம். காவல்துறையின் அனுமதி இல்லாமலேயே அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்களை தியேட்டர் நிர்வாகம் பிரிமியர் காட்சிக்கு வரவழைத்துள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு ஆந்திர மாநில அரசு குறித்து திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால், இந்த விவகாரத்தை ஆந்திர மாநில அரசு கடுமையாக விசாரணை செய்துவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


