தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் சுமார் 60,000 தாய் பாட் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயன்றதாகக் கூறப்படும் 18 வயது இளம் பெண்ணுக்கு ஊழியர்கள் மொட்டை அடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை பதிவு செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
‘நியூயோர்க் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி குறித்த இளம் பெண் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாங்காக்கின் பிங்க்லாவ் பகுதியில் உள்ள பிரபல மதுபான விடுதிக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு உணவு மற்றும் மதுபானங்களை பெற்றுக்கொண்ட அவர், சுமார் 60,000 தாய் பாட், அதாவது சுமார் 1,800 அமெரிக்க டொலர் பெறுமதியான கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், அந்தப் பெண் கட்டணத்தை செலுத்தாமல் வெளியேற முயன்றதை ஊழியர்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் வழங்குவதற்கு பதிலாக, ஊழியர்கள் தாங்களாகவே பிரச்சினையை கையாள முயன்றதாக கூறப்படுகிறது.
செலுத்தப்படாத கட்டணத்தின் ஒரு பகுதியை ஈடுசெய்யும் வகையில் தனது தலைமுடியை மொட்டையடிக்குமாறு அந்தப் பெண்ணிடம் ஊழியர்கள் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் சம்மதித்த பின்னர் மின்சார ‘ரேசர்’ மூலம் மொட்டை அடிக்கப்பட்டதாகவும் மதுபான விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளதுடன், அதில் “நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை. தலைமுடியின் சந்தை பெறுமதியை கணக்கிட்டு, அதனை பில் தொகையில் இருந்து கழிக்கிறோம்” என அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
பின்னர் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பணம் செலுத்தாதது தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், இளம் பெண்ணுக்கு இவ்வாறு தண்டனை வழங்கியமை ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்


