யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (14) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள் உரிய முறையில் சமர்ப்பிப்பதற்கான முன் ஆயத்த கலந்துரையாடலாக இது அமையும் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56 மில்லியன் ரூபாவினை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை அடிப்படையில் பிரதேச செயலக ரீதியாக இந்த நிதியினை பயன்படுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரால் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நீதி ஒதுக்கீடுகள் எவ்வாறு அமையவேண்டும், அதனை யார் செய்யவேண்டும் என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் தனது கருத்துகளை முன்வைத்ததை தொடர்ந்து, அவரது கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எம். நந்தகோபாலன், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


