கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த எசல பெரஹெரா, பண்டைய சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து பூரணமாகவும் மிகவும் கோலாகலமாகவும் நடத்தி முடிக்கப்பட்டமை குறித்து தெரிவிக்கும் ஆவணம், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (28) பிற்பகல் கண்டி, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வருகை தந்த ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, நான்கு மகா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் நிலமேமார்கள் சம்பிரதாயபூர்வமான முறையில் ஜனாதிபதியிடம் ஆவணத்தை கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி மற்றும் நிலமேமார்கள் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், பெரஹெராவில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.
எசல பெரஹெரா நிதியத்தின் மூலம் தொலைதூர தேவாலயங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூலமாக வழங்கி வைக்கப்பட்டதுடன், மத்திய மாகாண கலாசார திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “பூஜனிய தலதா சங்ஸ்க்ருத்திய” நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி தலதா பெரஹெரா சிறப்புற நடந்தேறியதை முன்னிட்டு மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினருக்கும், தியவடன நிலமே உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்களின் நிலமேமார்களுக்கும், அரச அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் இதற்காக பங்களிப்புச் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.


