Thursday, March 19, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கருண் நாயர் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஸ் டங் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

கிறிஸ் வோக்ஸ் விலகல்

முதல் இன்னிங்ஸில் கருண் நாயர் அடித்த பந்தினை தடுக்க முயன்று இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

காயம் காரணமாக உடனடியாக வோக்ஸ் ஃபீல்டிங்கிலிருந்து வெளியேறினார். அதன் பின், அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இந்த நிலையில், ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயத்தின் தன்மை குறித்து மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் தொடர்ந்து ஓவல் டெஸ்ட்டில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடாத நிலையில், காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸும் விலகியுள்ளது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments