Friday, September 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்

இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்

அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல் நடத்தின.

இரண்டாவது தாக்குதல் முதல் தாக்குதலுக்குப் பிறகு 17 நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது.

கட்டடங்கள் தீப்பிடித்ததால் மேல் தளங்களில் சிக்கிய மக்கள் அவதிப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் 110 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களும் தூசு மண்டலமாக இடிந்து விழுந்தன.

வொஷிங்டன் டிசி அருகில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் மேற்குப் பகுதியை மூன்றாவது விமானம் தகர்த்தது. பயணிகளின் கடுமையான எதிர்ப்பால் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளியொன்றில் விழுந்து நொறுங்கியது.

இது வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தை குறிவைத்துத் தாக்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் கடத்தல்காரர்கள் 19 பேர் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் பெரும்பாலோர் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்கள் இதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

இந்தத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களுக்குரிய வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, தாக்குதல்கள் நடைபெற்ற நியூயோர்க், வெர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மூன்று முக்கிய இடங்களிலும் அதிகாரப்பூர்வ நினைவு சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன.

அத்துடன், இன்றைய தினம் லண்டனில் உள்ள குவீன் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments