பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டன.
அதேவேளை தற்போது நிலவும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வழங்கிவரும் தலைமைத்துவம் குறித்து மிலிந்த மொரகொட தனது பாராட்டை வெளிப்படுத்தியதுடன், அது பிராந்திய உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு நேர்மறையாகப் பங்களிப்புச் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.


