உலகில் நடைபெறும் முன்னணிப் போட்டிகள் பலவற்றில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்கவிற்கு, ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த ஈட்டித் தொகுதியை (Javelin set) வழங்குவதற்குத் தொழிலதிபர் டட்லி சிறிசேன முன்வந்துள்ளார்.
ருமேஷின் பயிற்றுவிப்பாளரான டோனி பிரசன்னாவுடன் கலந்துரையாடியதன், பின்னர் அவர், இந்த அனுசரணையை வழங்குவதற்கு இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தரும் வரை ருமேஷிற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தொழிலதிபர் டட்லி சிறிசேன, ருமேஷின் பயிற்றுவிப்பாளருக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
இதற்கமைய, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஈட்டித் தொகுதிக்கு மேலதிகமாக, உலகின் மிக உயர்தரத்திலான ஈட்டித் தொகுதிகளை ஒவ்வொரு வருடமும் ருமேஷிற்கு வழங்கவும் டட்லி சிறிசேன தீர்மானித்துள்ளார்.


