காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலின் உணவகத்தில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அநுராதபுர மாவட்ட விசாரணை அதிகாரிகளால், குறித்த நிறுவனத்திற்கு எதிராக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
2026 ஜூலை 9 ஆம் திகதி அநுராதபுரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த 1,000 மில்லி லீட்டர் குடிநீர் போத்தல் ஒன்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 96 ஆம் இலக்கக் கட்டளையை மீறியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட விளக்கங்களை கருத்திற் கொண்டு பிரதிவாதிக்கு 500,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, ரயில் உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு அறியப்படுத்துவதற்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக இதற்கு முன்னரும் நுகர்வோர் சட்டங்களை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்திலும் குறித்த நிறுவனம் தொடர்பில் தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், மீண்டும் சட்டமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.


