பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும், விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.
விவசாயிகள் காப்புறுதி செய்யப்படும் அடிப்படைத் தொகையின் 7 சதவீதத்திற்கு சமமான பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சிகள் மற்றும் தீங்குயிரிகளால் ஏற்படும் பயிர் சேதங்கள், அத்துடன் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.
பயிர்களுக்கு சேதம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.300,000 முதல் ரூ.400,000 வரை இழப்பீடு பெற்றுக்கொள்ள விவசாயிகள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் விவசாய அபாயங்களை நிர்வகிக்க உதவுவதுடன், அவர்கள் தொடர்ந்து பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதையும் ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என சபை மேலும் தெரிவித்துள்ளது


