Friday, July 31, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனையடுத்து இடம்பெற்ற ஒரு மணிநேரத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையினர் 15 தீவிரவாதிகளைக் கொன்றதாக பொலிஸ் அதிகாரி இர்ஃபான் கான் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை. இருப்பினும், சமீபத்திய மாதங்களில் அப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்து வரும் பாகிஸ்தான் தாலிபான் (TTP) மீது சந்தேகம் வலுத்துள்ளது.

மாகாண பொலிஸ் அறிக்கையின்படி, கூடுதல் படைகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தியார் கான் என்பவரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.

மேலும் 20 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் சாவடி மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட கூடுதல் படைகள் வழியிலேயே மறித்துத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. இதன்போது கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்தது, பின்னர் பொலிஸார் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.

சமீபத்திய ஆண்டுகளில் பாக்கிஸ்தானில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் 2021 இல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஆப்கான் தாலிபான்களின் நெருங்கிய கூட்டாளியான TTP அமைப்புதான் எனப் குற்றம் சாட்டப்படுகிறது.

TTP தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு புகலிடம் அளிப்பதாக இஸ்லாமாபாத் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், காபூல் அக்குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments