Wednesday, July 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சர்வதேச உழைப்பாளர் தினம்!

சர்வதேச உழைப்பாளர் தினம்!

இன்று நாம் அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை மற்றும் வாராந்த விடுமுறை என்பது தானாகக் கிடைத்தவை அல்ல.

19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 மணித்தியாலங்கள் வரை வேலை செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

1886 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிகாகோவின் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் மே தினத்தின் வித்தாக அமைந்தது.

இந்த அலை உலகெங்கும் பரவி, 1889-ல் பெரிஸில் நடந்த சர்வதேச சோசலிச மாநாட்டில் மே 1-ஆம் திகதி தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

உலக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இந்த மே தினத்திற்கு இலங்கையில் ஒரு நீண்ட மற்றும் உணர்ச்சிகரமான வரலாறு உண்டு.

இலங்கையின் மே தின வரலாற்றில் ஏ.ஈ. குணசிங்கவின் பங்கு மிக முக்கியம் இடம் வகிக்கின்றது.

இலங்கை தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை என அறியப்படும் இவர், 1927-ஆம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலாக மே தினத்தைக் கொண்டாடினார்.

1933-ல் ஏ.ஈ. குணசிங்கவின் தலைமையில் கொழும்பு பிரைஸ் பூங்காவிலிருந்து காலி முகத்திடல் வரை ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, வாத்தியங்கள் முழங்க நடனங்களுடன் அணிவகுத்துச் சென்றனர்.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த முதல் பேரணியில் அரசியல் முழக்கங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை.

அது முழுக்க முழுக்க உழைப்பின் கொண்டாட்டமாகவே இருந்தது.

1935-ல் லங்கா சமசமாஜக் கட்சி உருவான பிறகு, மே தினம் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது. 1956-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மே 1-ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக அறிவித்தார்.

இது தொழிலாளர் உரிமைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். 1960-களில் கொழும்பு வீதிகள் இடதுசாரி கட்சிகளின் சிவப்பு நிறக் கொடிகளால் நிறைந்திருந்தன, இது ‘சிவப்பு மே தினம்’ என்று அழைக்கப்பட்டது.

இலங்கையின் மே தின வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு நாளாக அமைந்தது.

1993 மே 1. கொழும்பு ஆமர்மர் வீதி சந்தியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில், அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஒரு நாட்டின் தலைவரே மே தின ஊர்வலத்தில் கொல்லப்பட்டமை உலக மே தின வரலாற்றிலேயே ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாகும். ​

தோட்டத் தொழிலாளர்கள் முதல் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வரை இன்றும் இலங்கையின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் உழைப்பாளர்களுக்கு இந்த நாள் ஒரு கௌரவமாகும்.

இந்த நாளானது உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையையும், மனித மாண்பையும் பறைசாற்றும் ஒரு வரலாற்றுச் சாசனமாகும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறைகளை அடக்குவதற்கு உழைப்பாளர்கள் அன்று வீதியில் இறங்கினார்கள். உயிர்த் தியாகமும் செய்தார்கள் அவர்களை நினைவுகூறும் அதேவேளை அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை தொடர்ந்தும் பாதுகாத்து முன்னொக்கி செல்ல வேண்டும் என்பதே இந்த நாள் உணர்த்தும் முக்கிய செய்தியாக அமைந்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருளாக ஆரோக்கியமான உளவியல் சமூகப் பணிச்சூழழை உறுதி செய்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்ற நவீன பணிச்சூழல் சார்ந்த சிக்கல்களை கையாள்வதில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் அத தெரண சார்பில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments