Thursday, September 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இந்தியாவில் விசேட பயிற்சி பெற்ற 20 இலங்கை பாற்பண்ணையாளர்கள்

இந்தியாவில் விசேட பயிற்சி பெற்ற 20 இலங்கை பாற்பண்ணையாளர்கள்

இலங்கையைச் சேர்ந்த 20 பாற்பண்ணையாளர்கள் அடங்கிய குழுவினர், விசேட பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி திட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாற்பண்ணையாளர்கள் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அறிவித்த திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் 700 இலங்கையர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய பால்வள அபிவிருத்தி சபையில் (NDDB) இந்த ஒரு வாரகால பயிற்சி நடைபெற்றது.

பாற்பண்ணைத் துறையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பயிற்சி அமைந்திருந்ததுடன், விலங்கு இனப்பெருக்கத்தில் நவீன தொழில்நுட்பங்கள், தர உத்தரவாதம், கால்நடைகளுக்கான உணவூட்டல், சமச்சீர் போஷணையின் முக்கியத்துவம், அதிக உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் துறைசார் திறன் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பயிற்சி வழங்கப்பட்டது.

இதனிடையே, நடைமுறை அனுபவத்தைப் பெறும் வகையில் குழுவினர் மொத்த பால் குளிரூட்டும் அலகு, அமுல் TMR தொழிற்சாலை, கைரா பால் சங்கம் மற்றும் NDDB-யின் தயாரிப்பு மற்றும் செயல்முறை மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டனர்.

இதன் மூலம் நவீன பால்வளக் கட்டமைப்பு, உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் பால் விநியோகச் சங்கிலி தொடர்பான நடைமுறை அறிவை பங்கேற்பாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும், தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதுடன், பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் மற்றும் நிலையான பால்வளக் கட்டமைப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் இந்த திட்டம் கவனம் செலுத்தியுள்ளது.

தூய்மையான பால் உற்பத்தி, சுகாதாரமான கையாளல் நடைமுறைகள், சிறந்த பண்ணை முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நிலையான பாற்பண்ணை முறைகள் குறித்தும் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சித் திட்டம், இந்தியா – இலங்கை இடையிலான பால்வளத் துறை அறிவுப் பரிமாற்றம் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments