ஆந்திராவில் 3 வயது குழந்தையை பாலத்தில் தனியாக விட்டுவிட்டு, தம்பதியினர் ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்புரூ கிராமத்தைச் சேர்ந்த தொட்டா சாய் (29), அவரது மனைவி சிரீஷா (28) ஆகியோர் வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் தங்களது 3 வயது குழந்தையுடன் ஸ்கூட்டரில் சின்சினாடா பாலத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு குழந்தையை ஸ்கூட்டரிலேயே அமரவைத்துவிட்டு, இருவரும் கோதாவரி ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.
“அம்மா… அப்பா…” – கதறிய குழந்தை
இருள் சூழ்ந்த, கடுமையான குளிரில் அந்தப் பிஞ்சு குழந்தை பாலத்தின் மீது தனியாக நின்று கதறியுள்ளது.
தெலுங்கில் “அம்மா… அப்பா…” என அழுதபடி குழந்தை கத்தியுள்ளது. இதனை கவனித்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ஆற்றில் தீவிர தேடுதல்
அண்மையில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஆற்றில் குதித்த தம்பதியினரை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் படகு குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரணம் என்ன?
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநராக பணியாற்றி வந்த தொட்டா சாய், வளைகுடா நாட்டில் வேலை செய்துவிட்டு சமீபத்தில்தான் ஆந்திராவுக்குத் திரும்பியதாக தெரியவந்துள்ளது.
கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக தம்பதியினர் தங்களது வீட்டை விற்க முடிவு செய்திருந்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், தம்பதியினர் ஆற்றில் குதித்ததற்கான முழுமையான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


