வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலபுன் அமோர்ன்விவாட் அழைப்பின் பேரில் செப்டெம்பர் 14 முதல் 16ஆம் திகதி வரை மேற்கொண்ட தாய்லாந்திற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துள்ளார்.
விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU), தாய்லாந்தில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான ஒப்பந்தமும் (MoA) கைச்சாத்திடப்பட்டன.
இதன் மூலம் இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் 10,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் ஆட்சேர்ப்புக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, முதலீடு, கல்வி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான இலங்கை–தாய்லாந்து விசா விலக்கு ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக தாய்லாந்தின் சுற்றுலா அதிகாரசபை மற்றும் அந்நாட்டு தனியார் துறை பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.


