Monday, March 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்உத்தரபிரதேசத்தில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்: தம்பதியருக்கு மரண தண்டனை!

உத்தரபிரதேசத்தில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்: தம்பதியருக்கு மரண தண்டனை!

உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவரும் 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர்.

சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உத்தர பிரதேச சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய சோதனையில், குறித்த தம்பதியின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை, இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆன்லைன் கேம் விளையாட வைப்பது, சாக்லேட், இனிப்புகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தருவது என, பலவிதமாக ஆசைக்காட்டி சிறுவர்களை இருவரும் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் வெளிநாட்டுக்கும் விற்கப்பட்டதும் தெரிய வந்தது.

இவர்களால் பாதிப்படைந்த சிறுவர்கள் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, 2020ல் வழக்குப்பதிவு செய்த குற்றப்புலனாய்வு துறையினர் குறித்த தம்பதியின் வீட்டில் சோதனை நடத்தியது.

இதில், 8 லட்சம் ரூபாய், 12 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் , ஒரு ஹார்ட் டிஸ்க், ஆறு பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் இருவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

ஆறு ஆண்டுகளாக நடந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட, 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

இதையடுத்து குறித்த தம்பதி செய்த குற்றங்கள் அரிதிலும் அரிதானவை எனவும் மிகவும் ஒழுக்கக்கேடானது எனவும் இதுபோன்ற குற்றங்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையும் உலுக்குகின்றன எனவும் தெரிவித்து குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments