Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் கொந்தளிக்கும் கடும் பனிப்புயல் – இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அமெரிக்காவில் கொந்தளிக்கும் கடும் பனிப்புயல் – இயல்பு வாழ்க்கை முடக்கம்!

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களைத் தாக்கியுள்ள சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 8,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டும், தாமதமடைந்தும் உள்ளதால் வான் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் அமெரிக்காவின் உள்நாட்டு விமான சேவைகளில் சுமார் 19 சதவீதமானவை இரத்துச் செய்யப்பட்டன. ஜொ் புளூ நிறுவனம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, தனது 80 சதவீத சேவைகளை இரத்துச் செய்தது.

யுனைடெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஆகிய நிறுவனங்கள் தலா 20 சதவீத விமான சேவைகளை நிறுத்தின. அத்துடன் நாளை வரை சுமார் 1,600 விமானங்கள் இரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பொழிவு சற்றுத் தணிந்துள்ள நிலையில், இன்று  காலை முதல் நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே , லா கார்டியா மற்றும் போஸ்டன் ஆகிய விமான நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகளை மீள ஆரம்பிக்க விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இன்றைய தினம் விமான இரத்துக்கள் 7 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 2.5 அடி (76 செ.மீ) உயரத்திற்குப் பனி கொட்டியுள்ளதால், பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வாகனங்களை வீதிகளில் செலுத்துவதற்குப் பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. அத்துடன், நியூயோர்க் மற்றும் போஸ்டன் இடையிலான ‘அம்ட்ராக்’ புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை சீரடைந்த பின்னரே முழுமையான இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments