Tuesday, March 10, 2026
spot_img
Homeஉலக செய்திகள்மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்றிருக்கும் சுமார் 2இலட்சம் பிரித்தானியப் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான விசேட நடவடிக்கையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது.

வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான (Evacuation) அவசரத் திட்டங்களை அரசாங்க அதிகாரிகள் வகுத்து வருகின்றனர்.

இதுவரை 94ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது இருப்பிட விபரங்களை வெளிவிவகார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை உரையாற்றிய பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பிரித்தானியர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் விமான நிலையங்களைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அங்கு தங்கியுள்ள பிரித்தானிய மக்கள் தயவுசெய்து விபரங்களைப் பதிவு செய்து, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, துபாய், தோஹா மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

குறிப்பாக துபாய் விமான நிலையம் ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள நிலையில், அங்குள்ள பிரித்தானியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா, ஜோர்டான், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஈரான் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்கவில்லை என்றாலும், தனது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கத்தாரிலிருந்து இயங்கும் பிரித்தானியாவின் ‘டைபூன்’ (Typhoon) போர் விமானம் ஒன்று, ஈரானிய ட்ரோன் (Drone) ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஹ்ரைனில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளத்திற்கு மிக அருகில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்த போதிலும், இதுவரை பிரித்தானியர்கள் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிராந்தியத் தலைவர்களுடன் பேசிய பிரதமர் ஸ்டார்மர், ஈரானின் ஆபத்தான போக்கிற்கு எதிராகத் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல நாடுகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களைப் பாதுகாக்கும் இத்தகையதொரு நெருக்கடி கால நடவடிக்கையை பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுப்பது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments