Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

(உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (27) பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி, இந்த அளிப்புப் பத்திரங்கள் அநுராதபுரம் மாவட்டத்தில் 500 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, 1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை பயன்படுத்தி வரும் மக்களுக்கு, அந்தக் காணியின் மீதான முழுமையான உரிமை இல்லாத காரணத்தினால், அதனை மனிதத் தேவைகளுக்கோ அல்லது பொருளாதார அபிவிருத்திக்கோ பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இதன் காரணமாக,தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களில் உள்ள நிபந்தனைகளை நீக்கி 1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கு இணங்க, அவற்றுக்குப் பதிலாக ‘பூரண அளிப்புப் பத்திரம்’ வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் தங்கள் விருப்பத்தின் பேரில் அனுமதிப்பத்திரங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பவர்களுக்கு இந்த புதிய உரித்து பூரண அளிப்புப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.

அனுராதபுரத்தை தொடர்ந்து இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டமானது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments