மத்திய கிழக்கில் எண்ணெய்க் கப்பல்களைப் பாதுகாக்க கடற்படைக் கப்பல்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் திங்களன்று (16) அறிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் டேங்கர்களைப் பாதுகாக்க நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கிற்கு பாதுகாப்பு கப்பல்களை அனுப்புவது குறித்து நாங்கள் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்றும், ஜப்பான் சுயாதீனமாக என்ன செய்ய முடியும், சட்ட கட்டமைப்பிற்குள் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம் என்று ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேநேரம், அமெரிக்காவின் மற்றொரு முக்கிய இந்தோ-பசுபிக் நட்பு நாடான அவுஸ்திரேலியா, நீரிணையை மீண்டும் திறப்பதற்கு உதவுவதற்காக தன்னிடம் கோரப்படவில்லை என்றும், கடற்படைக் கப்பல்களை அனுப்பும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கி, மூன்றாவது வாரத்தில் உலக எரிசக்தி சந்தைகளை உலுக்கிய நிலையில், வளைகுடாவிலிருந்து எண்ணெயை பெரிதும் நம்பியுள்ள நாடுகள் உலகின் 20% எரிசக்தி போக்குவரத்து செல்லும் நீரிணையைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்திமையும் குறிப்பிடத்தக்கது.


