Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் குடியிருப்பில் கோழிப்பண்ணை: பொதுமக்கள் அவதி

யாழில் குடியிருப்பில் கோழிப்பண்ணை: பொதுமக்கள் அவதி

PoultryFarmயாழில் குடியிருப்புக்கு நடுவே அமைந்துள்ள தனியார் கோழிப்பண்ணையால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் தெற்கு சத்தியபுரம் பிரதேசத்தின் கறுத்தான் வடலி குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கோழிப்பண்ணையால் அதனைச் சூழவுள்ள பொதுமக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

ஜே – 182 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் ஒருவர் காணியை வாங்கி 2024 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை அமைத்துள்ளார். குறித்த பண்ணை அமைக்கும் போதே கிராம மக்கள் சந்தேகமடைந்து குறித்த காணி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மேலே சூரிய மின்கல படலம் அமைத்து பெண்களுக்கு சுயதொழில் முயற்சி வாய்ப்பு வழங்கப்போவதாக கூறியிருந்தார். பின் கூறியதற்கு மாறாக கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.

கோழிப்பண்ணை அமைத்த பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றம், ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், இலையான் பெருகுவதால் ஏற்படும் தொற்றுகள் என பெரும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் கிராம மக்கள் கிராம சேவையாளர், பிரதேச சபை, பிரதேச செயலகம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம், சுற்றுச் சூழல் அதிகாரசபை போன்ற அலுவலகங்களுக்கு சென்று உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

குடியிருப்புக்கு நெருக்கமாக உள்ள பகுதியில் தாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச் சூழல் அதிகார சபையினர் தங்கள் அதிகார வரம்பைக் குறிப்பிட்டு இந்த விடயத்தில் பிரதேச சபையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் மாறி மாறி ஏனைய அரச அலுவலகங்களை கைகாட்டி விட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும்,

வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஷிடம் பொதுமக்கள் சென்று முறையிட்டு அவர் நேரடியாக வந்து பார்வையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நல்ல காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழ வேண்டிய நாங்கள் தொடர்ந்தும் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று பொதுமக்கள் பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் புதிதாக பொறுப்பேற்ற பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் சென்று முறையிட்டுள்ளனர். அவர் அனைத்து தரப்பினரிடமும் ஆராய்ந்து ஓரிரு வாரங்களில் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார்.

குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments