Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40...

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு!

இன்று (பெப்ரவரி 28, 2026) மத்திய கிழக்கில் நிலைமை மிக மோசமடைந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இன்று காலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல்கள் உலகையே அதிரவைத்துள்ளன.

இது தொடர்பான விரிவான பின்னணி மற்றும் தற்போதைய கள நிலவரம் குறித்த பார்க்கலாம்

இன்று காலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) என்ற பெயரில் பாரிய தாக்குதலைத் தொடங்கின.

தெஹ்ரான், இஸ்ஃபஹான் மற்றும் கராஜ் ஆகிய இடங்களில் உள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்திற்கு அருகிலும் குண்டுகள் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது ‘புரட்சிகர காவல்படை’ (IRGC) மூலம் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி வருகிறது.

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்து வருகின்றன.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளன.

வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகியவையும் தமது வான்பரப்புகளை மூடியுள்ளன.

இந்த மோதலுக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் உள்ளன:

கடந்த சில வாரங்களாக ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தி பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தமையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டின.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்றும், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்காகவே ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளது.

2025 ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே 12 நாட்கள் நீடித்த ஒரு வான்வழிப் போர் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாகவே இன்றைய மோதல்கள் வெடித்துள்ளன.

இந்த போரின் விளைவாக இனி உலக நாடுகளில் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியப் பிரஜைகளை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஐநா பாதுகாப்புச் சபையை உடனடியாகக் கூட்டுமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலுமாக அகற்றும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments