பிரித்தானியாவின் எசெக்ஸ் (Essex) பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், அப்பகுதி குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
எப்பிங் (Epping) நகரில் உள்ள ‘பெல் ஹோட்டலில்’ (The Bell Hotel) தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அந்த விடுதிக்கு முன்னால் தீவிர போராட்டங்கள் வெடித்தன.
இந்தச் சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டனர்.
இதேவேளை, எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட சபையின் (Epping Forest District Council) உள்வாரி மின்னஞ்சல் பரிமாற்றங்கள், போராட்டத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் ஜூலை 16 அன்று சபையின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ ஸ்மால், உள்துறை அமைச்சுக்கு (Home Office) அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் எனவும் அவை குறித்த ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
அதில் சமூகத்தில் நிலவும் அச்சத்தைக் குறைக்க அந்த விடுதியை மூடுவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இக்கோரிக்கையை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.
பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் விடுதிகளை மூடினால், போராட்டக்காரர்கள் அதையே ஒரு யுக்தியாகக் கையாண்டு அரசாங்கத்தின் பணிகளை முடக்குவார்கள் என அதிகாரி ஒருவர் இதன்போது பதிலளித்துள்ளார்.
இதேவேளை, ஜூலை 17 அன்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதுடன் வாகனங்கள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிய போது, ‘ரிபார்ம் யுகே’ (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage) போன்றவர்களின் கவனம் இதற்குத் திரும்பியதால், இது ஒரு தேசியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என அதிகாரிகள் அஞ்சியமையும் இந்த மின்னஞ்சல் ஆதாரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.


