Sunday, March 15, 2026
spot_img
HomeUncategorizedஇலங்கை கடற்பரப்பில் அரக்கத்தனமான படகுகளுடன் நுழையாதீர்கள்- நுழைந்தால் கைது செய்ய நாங்கள் முழு ஆதரவு!

இலங்கை கடற்பரப்பில் அரக்கத்தனமான படகுகளுடன் நுழையாதீர்கள்- நுழைந்தால் கைது செய்ய நாங்கள் முழு ஆதரவு!

நாட்டின் சட்டதிட்டங்களை மீறி தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாகவும், இந்திய மீனவர்கள் மனித நேயத்துடன் செயல் பட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் 47 இந்திய மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.குறித்த கைதுக்கு எதிராக இந்தியாவில் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

இன்று மட்டுமல்ல இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களின் பெறுமதியான மீன்பிடி வலைகளை நாசம் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை இருக்கிறது.குறித்த இறையான்மையை யார் மீறு கிறார்களோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையல் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது.பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய மீனவ சங்கங்கள் அல்லது மீனவ அமைப்புகள் கடைபிடிக்கவில்லை.

அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இன்று வரை எமது இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்ற நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள்.ஆனால் இந்திய எல்லைக்குள் வைத்தே அவர்கள் இலங்கை கடற்படை கைது செய்வதாக குற்றம் சுமத்துகிறார்கள்.

தயவு செய்து அரக்கத்தனமாக படகுகளுடன் எங்கள் கடல் எல்லைக்குள் நுழையாதீர்கள்.நாங்களும் இந்த கடலை நம்பி இருக்கிறோம்.எங்களையும் வாழ விடுங்கள்.கோடிக்கணக்கான பெறுமதியான கடல் வழங்களையும்,மீன்பிடி உபகரணங்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம்.எமது வாழ்வாதாரத்தையும் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். கடற்றொழில் அமைச்சர் கூறியது போல் தயவு செய்து இலங்கை கடற்பரப்பில் வராதீர்கள்.

இலங்கை கடற்பரப்பில் நுழைந்தால் உங்களை கைது செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை.அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சருக்கும் , இலங்கை கடற் படைக்கும் நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம்.

உ ங்களின் கைது,பாதிப்பு எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.அதனை நாங்கள் உணர்கிறோம்.எனவே இனி இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் மன்னாரில் கடல் உணவு ஏற்றுமதி தொடர்பாகவும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் கருத்து தெரிவித்தார்.

நீல நிற கால் நீச்சல் நண்டு கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி பொருளாக அமைந்திருந்தது.

குறித்த தொழில் முறை புத்தளம், கல்பிட்டி தொடக்கம் மன்னார்,பூநகரி,யாழ்ப்பாணம் வரையிலான மீனவர்களின் முக்கிய தொழிலாக நீல நிற கால் நீச்சல் நண்டு தொழில் காணப்பட்டது.

குறித்த நண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.தற்போது அமெரிக்கா குறித்த நண்டு கொள் முதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அதற்கான காரணம் இலங்கையில் இருந்து தாங்கள் கோரிய ஆவணம் அல்லது மீன்பிடி தொடர்பான தகவல்களை உரிய தரப்பினர் வழங்காததால் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் ஏற்றுமதிக்கான திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. எதிர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளும் கையாளப் போகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் நிருபர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments