சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), மார்ச் மாதம் 3ஆம் திகதி இரவு 9.30 மணியளவில், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், நான்சியைக் கொலை செய்த நபர்கள் வந்த வாகனம், அந்த தெருவில் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது.
அந்த நபர்கள் நான்சியைக் கத்தியால் குத்திவிட்டு அதே வாகனத்தில் தப்பியோடியுள்ளார்கள்.
ஆக, அந்த வாகனம் பார்க் செய்யப்பட்டிருந்ததை அப்பகுதியில் வாழும் மக்கள் யாராவது பார்த்தார்களா, அல்லது அந்த வாகனம் மீண்டும் புறப்பட்டுச் செல்வது அந்த தெரு வழியாக வந்த யாருடைய காரிலுள்ள கமெராவிலாவது பதிவாகியுள்ளதா என விசாரித்துவரும் பொலிசார், அது குறித்து தகவல் ஏதாவது கிடைத்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுளார்கள்.
இதற்கிடையில், இந்த வழக்கில் ஒன்ராறியோ மாகாண பொலிசாரும் இணைந்துகொண்டுள்ளார்கள்.
இதற்கிடையில், நான்சி வழக்கைப் பொருத்தவரை, அவர் தற்செயலாக தாக்கப்படவில்லை, யாரோ திட்டமிட்டே அவரை கொலை செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல், மற்றும் இந்திய அரசியல், தான் சார்ந்த பஞ்சாப் அரசியல், குறிப்பாக காலிஸ்தான் அமைப்பு குறித்த கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


