நாட்டில் தற்போதுள்ள நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், அதன் தன்னாட்சிக்கும் 22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் பல பாரிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. நமது நாடு ஒரு சர்வாதிகார நாடல்ல, மாறாக ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாட்டின் மிக முக்கியமான ஜனநாயகக் கோட்பாடுகள் அரசாங்க முறைமையின் மூன்று தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் பாதுகாக்கப்படுகின்றன.
இங்கு இந்த மூன்று தூண்களுக்கும் அதிகாரப் பகிர்வு இருப்பதுடன், அவற்றுக்கென தனித்துவமான அதிகராங்கள் மத்தியிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளும் அமைந்து காணப்படுகின்றன. இந்த தடைகள் மற்றும் சமன்பாடுகள் ஊடாகவே இந்த அதிகாரம் சமப்படுத்தப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இளம் பெண் சட்டத்தரணிகளுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்று இந்த ஜனநாயகத்திற்கு பாரிய மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத் தூணின் ஜனாதிபதியும், பெரும்பான்மை பலம் கொண்ட சட்டவாக்கமும் நாட்டின் நீதி அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன. கனம் நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக்கி, நீதித்துறையின் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறி, 220 இலட்சம் மக்கள், கனம் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இல்லாமலாக்கும் கீழ்தரமான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாகவே வந்த ஒன்றாகவே 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் குறிப்பிட முடியும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது மக்களின் இறைமையைப் பலப்படுத்திப் பாதுகாப்பதற்கேயாகும். அரசியலமைப்பின் 3, 4, 83, 107 ஆம் பிரிவுகளைப் பார்க்கும்போது, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படுமாயின், அது மக்களின் இறையாண்மையையும் அவர்களினது வாக்களிக்கும் உரிமையை மீறும் செயலாகும்.


