இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச் சடங்குகள் மற்றும் தான நிகழ்வுகள் நடத்தப்பட்ட நபர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் கொகாவெவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல்போன இந்த நபர், இதற்கு முன்னரும் சில நாட்கள் வீட்டை விட்டுச் சென்று மீண்டும் திரும்பும் வழக்கத்தைக் கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் குடும்பத்தினர் இது குறித்து அக்கறை காட்டவில்லை.
எனினும், ஒரு வாரத்திற்கும் அதிகமான காலம் கடந்த நிலையில், அவரது மனைவி கொகாவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சில நாட்கள் கழித்து, ஹபரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காடொன்றில் விஷம் அருந்தி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆகஸ்ட் 27ஆம் திகதி கொகாவெவ பொலிஸாரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, உறவினர்கள் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
சடலத்தில் இருந்த ஆடைகள், புத்தாண்டுக்காகத் தனது மகன் தந்தைக்கு வாங்கித் கொடுத்த ஆடைகளை ஒத்திருந்ததால், அது தனது கணவரின் சடலம் தான் என மனைவியும் உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய, ஆகஸ்ட் 31ஆம் திகதி பொலன்னறுவை பகுதியில் சடலம் அடக்கம் செய்யப்பட்டு, மத வழக்கங்களின்படி செப்டம்பர் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் சங்கதான தான நிகழ்வுகளையும் குடும்பத்தினர் நடத்தியுள்ளனர்.
எனினும், இறந்துவிட்டதாக நம்பப்பட்ட நபர் திடீரென பஸ் மூலம் தனது தங்கையின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், அது தொடர்பாகக் கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய உடனடியாகச் செயல்பட்ட குடும்பத்தினர், இச்சம்பவம் குறித்து கொகாவெவ பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.


