சீனாவில் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றுள்ள சீன மாணவி செஞ்சியா யூ தமிழ் நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
சூரியன் செய்திப் பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீன மின்சூ பல்கலைக்கழகத்தில் (Minzu University of China) தமிழ் மொழியைக் கற்றுத் தற்போது சிறப்புப் பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ் ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மொழி என்பதால் அதனைக் கற்க ஆர்வம் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“எங்களது பல்கலைக்கழகத்தில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறந்த பேராசிரியர்கள் எமக்குத் தமிழ் மொழியைக் கற்பித்தனர்.
அகத்தியர் முதல் தொல்காப்பியர் போன்ற சான்றோர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழியை நான் கற்றுக்கொண்டதையிட்டுப் பெருமிதம் அடைகின்றேன்.
தமிழ் மொழியிலுள்ள முக்கிய நூல்களை, எதிர்காலத்தில் சீன மொழியில் மொழிபெயர்த்துச் சீனாவில் வெளியிடுவதே எனது முதன்மை எதிர்பார்ப்பாகும்.”
தனது செவ்வியின் நிறைவில் , “வாழ்க தமிழ், வளர்க தமிழ்” எனக்கூறித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.


