Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சீரற்ற வானிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சீரற்ற வானிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அவ்வேளைகளில் இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த வான்பரப்பு மற்றும் கடல் எல்லைகளுக்குள் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கல்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments