யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், நீர்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தை விட்டுவிட்டு அதில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளமை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி அதிவேகமாகச் சென்ற மஹேந்திரா பொலிரோ வாகனம் ஒன்று நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பேருந்து நிலையத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
அதிவேகமாக வந்த வாகனம் வீதியை விட்டு விலகி பேருந்து நிலைய கட்டிடத்தின் மீது மோதியத விபத்தினால் மஹேந்திரா பொலிரோ வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், பேருந்து நிலைய கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
கோப்பாய் காவல்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, விபத்துக்குள்ளான பொலிரோவில் பயணித்த எவரும் அங்கு இருக்கவில்லை.
அவர்கள் காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களா என்பது குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது விபத்துக்குள்ளான வாகனம் கோப்பாய் காவல்துறையினரால் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை வைத்து அதன் உரிமையாளரைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



