காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்குத் தான் பெயரிட்டுள்ள “சமாதான சபை” (Board of Peace) உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Truth Social கணக்கில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றில் ட்ரம்ப், இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்டுள்ள “ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை” (Trump 20-Point Plan) நடைமுறைப்படுத்துவதில் இதுவொரு முக்கியமான மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரது கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் பல கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், நிராயுதபாணியாக்கல் முன்னேறிச் செல்லும்போது இஸ்ரேலியப் படைகள் காஸா பகுதியிலிருந்து வெளியேறும்.
மேலும், சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையும் புதிய பாலஸ்தீன பொலிஸ் படையும் இணைந்து காஸா பகுதியின் பாதுகாப்பைப் பொறுப்பேற்கும்.
இந்த உடன்பாட்டிற்காக இடைத்தரகர்களாகச் செயற்பட்ட எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“இந்த உடன்பாடு காஸா பகுதியில் புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் நிர்வாகம் நடப்பதற்கான முக்கிய படியாகும். அந்த அரசாங்கம் ‘Board of Peace’ சபையுடன் நெருக்கமாகச் செயற்பட்டு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும். அதேவேளையில், இஸ்ரேலுக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்,” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கெய்ரோவில் இடைத்தரகர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையே அமெரிக்கத் தலையீட்டுடன் முன்மொழியப்பட்ட காஸா அமைதித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தபட்சம் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா மருத்துவ ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.


