மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான முதல் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சூரியன் தெற்கு நோக்கி நகர்வதால் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையான அட்சரேகைகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (02) நண்பகல் 12.10 மணியளவில் அனமடுவ, மொரகொல்லகம, தம்புள்ள, மணம்பிட்டிய மற்றும் வாளைச்சேனை ஆகிய பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


