கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவரை கடத்திச் சென்று உயிரைப் பறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சீகிரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் சீன நாட்டின் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் பின்னர், சீன நாட்டவர் ஒருவர் பலவந்தமாக கடத்தப்பட்டதுடன், பின்னர் அவரது சடலம் எஹலியகொட பகுதியில் உள்ள வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதுடன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியிருந்த ஏனைய சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதற்கமைய, சீகிரியா பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சீன நாட்டவர்களிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


