கொழும்பிலுள்ள நேபாளத் தூதரகத்துக்கு,வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இன்று (31) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர்ச்சேதங்களும் பெருமளவிலான சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் விஜித ஹேரத் இவ்வாறு விஜயம் மேற்கொண்டு,நேபாள அரசாங்கத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கையின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இதன்போது தூதரகத்தின் பதில் தூதுவர் விஜய் குமார் ரவுத்தை (Vijay Kumar Raut) சந்தித்த அமைச்சர், இலங்கை மக்களின் சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தத் துயரமான தருணத்தில் நேபாளத்துக்கு இலங்கை என்றும் உறுதுணையாக நிற்கும் என்பதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரிக்கமுடியாத தோழமையையும் மீள உறுதிப்படுத்தியுள்ளார்.


