Thursday, September 17, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இலங்கையில் பிறந்த ஓவியர் இவான் பீரிஸின் படைப்பு சாதனை விலையில் விற்பனை

இலங்கையில் பிறந்த ஓவியர் இவான் பீரிஸின் படைப்பு சாதனை விலையில் விற்பனை

இலங்கையில் பிறந்த பிரபல ஓவியக் கலைஞர் இவான் பீரிஸின் ‘The Well’ என்ற ஓவியம், நியூயோர்க்கில் நடைபெற்ற கிறிஸ்டீஸ் நிறுவனத்தின் தெற்காசிய நவீன மற்றும் சமகாலக் கலை ஏலத்தில் 640,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இதன் மூலம், இலங்கையில் பிறந்த கலைஞர் ஒருவரின் படைப்பு ஏலத்தில் விற்பனையான அதிகபட்ச விலைக்கான புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

1957ஆம் ஆண்டு எண்ணெய் வண்ணத்தில் கன்வஸ் மீது வரையப்பட்ட இந்த ஓவியம், ஏலத்திற்கு முன்பாக 70,000 முதல் 100,000 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாக 640,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இவான் பீரிஸின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக ‘The Well’ ஓவியத்தை கிறிஸ்டீஸ் நிறுவனம் வர்ணித்துள்ளது. மேலும், அவரது ஏழு பிரமாண்டமான ‘Panel Paintings’ எனப்படும் ஓவியங்களில் ஏலத்தில் விற்பனைக்கு வந்த ஒரே படைப்பு இதுவாகும் எனவும் கிறிஸ்டீஸ் தெரிவித்துள்ளது.

1958ஆம் ஆண்டு வெனிஸ் பியன்னாலே கலைக் கண்காட்சியில் இந்த ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையின் கிராமப்புறக் கடலோரப் பகுதியை மையமாகக் கொண்ட இந்த ஓவியத்தில், ஒரு கிராமத்து கிணற்றைச் சுற்றியுள்ள காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

இவான் பீரிஸ், இலங்கையின் நவீன கலை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ‘43 குழு’ (’43 Group) அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார். 1921ஆம் ஆண்டு பிறந்த அவர், 1988ஆம் ஆண்டு காலமானார்.

இவரது ‘The Well’ ஓவியம் பெற்றுள்ள இந்த சாதனை விலை, இலங்கையில் பிறந்த கலைஞர்களின் படைப்புகளுக்கு சர்வதேச கலைச் சந்தையில் கிடைத்து வரும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments