ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய வானூர்திகளை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபருக்கு பிணையாளர்களாக தோன்றிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவருக்கு பிணை நின்ற பிணையாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதன் காரணமாகவே அவர்களுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என தெரிவித்தார்.
எனினும், தாயாரின் மறைவு குறித்து நீதிமன்றத்துக்கு எந்தவித எழுத்துப்பூர்வ அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பதால், பிடியாணையை திரும்பப் பெறும் சந்தர்ப்பத்தில் அது குறித்து நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.


